விரும்பிப் படித்தது(4)

சுதந்திர போரட்டத் தியாகி, எல். கரையாளர் 1940ல் தன் திருச்சி சிறை அனுபவங்களை பற்றிச் சொன்னது.

சத்தியாகிரகிகள், கடைத்தெருவிலிருந்து செயிலுக்கு வர வேண்டிய தங்களுக்கு தேவையான சாமான்களின் பட்டியலைத் குறித்துத் கொடுத்து, செயிலரிடம் அனுமதி பெற வேண்டும். பசாரிலிரு்ந்து ஒரு வார்டன் வாங்கிக் கொண்டு வாருவான். வந்ததும் அவைகளை அவரவர்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும்.

சாமான்களை அனுமதிக்கும் செயிலர், மிகவும் வேடிக்கையாக நடந்து கொண்டார். சோப்பை அனுமதித்துக் கொண்டே இருப்பார். திடீரென்று அனுமதிக்க மாட்டார். ஒருவருக்கு அனுமதிக்கும் சாமான் இன்னொருவருக்கு தரப்பட மாட்டாது.

எந்த சமயத்தில் எந்த சாமான் தரப்படும் தரப்பட மாட்டாது என்பது யாருக்குமே தெரியாது. ஆகவே, நாங்கள் ஒரே சாமானைத் திரும்ப திரும்ப எழுதிக் கொண்டே இருப்போம். ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் அது அனுமதியாகி வந்து விடும் என்று ஒரு நம்பிக்கை. அப்படியே நடந்து கொண்டும் இருந்தது.

ஒரு வேளை செயிலர் வேலைத் தொந்தரவின் காரணமாக சலித்துப் போய் சில நாட்கள் பட்டியலை பார்க்காமலே கையெழுத்துப் போட்டு விடுவார் போலிருக்கிறது.

ஒருதடவை பி.எச். சொக்கலிங்கம் ஒரு கைப் பெட்டியும் அந்தப் பெட்டியில் போடுயவதற்கு பாச்சா உருண்டைகளும் வேண்டும் என்று எழுதியிருந்தார். பெட்டி அனுமதிக்கப் படவில்லை. பாச்சா உருண்டைகள் மட்டும் இரண்டு டசன் வந்து சேர்ந்தன. அவற்றை என்ன செய்வது பெட்டியே இல்லாமல்.

இன்னொரு முறை டாக்டர் சுப்பராயன் சமசுகிருதத்தில் ஒரு புத்தகத்தின் பெயர் ஆசிரியர் பெயர் வெளியிட்ட கம்பெனியின் பெயர் கிடைக்கும் இடம் இவற்றை குறித்திருந்தார்.

இவை ஒவ்வொன்றையும் பார்த்து தனித்தனிப் பொருள் என்று எண்ணி ஒவ்வொன்றையும் அனுமதிப்பதற்கு அறிகுறியாக சரி என்ற குறி போட்டிருந்தார் செயிலர்.

தேன் நெய் அனுமதிப்பர். ஆனால் எந்தவிதமான எண்ணெய் அனுமதிப்பதில்லை. நாமாகவும் வரவழைத்துக் கொள்ள முடியாது. சர்தார் வேதரத்தினம் பிள்ளை யோசனை செய்து ஒருநாள் தன் பட்டியலில் கொப்ரிகாதேல் என்று  விட்டார். செயிலர் சரி என்றார் ஒரு பெரிய தேங்கா எண்ணெய் புட்டி சிறைக்குள்ளே வந்து வந்து விட்டது.

No comments: