சங்கராந்தி(சிந்தனை)

சங்கராந்தி என்ற தெலுங்கு படம் பார்த்தேன்(பழைய படம்தான்). அந்த படம் தமிழிலும் வந்துள்ளது பெயர் தெரியவில்லை. பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்ற பாட்டு வருமே அந்த படம்(படம் பெயர் தெரிந்தவர்கள் சொல்லவும்).

இப்போது தெரிந்து விட்டது.. அந்த படத்தின் பெயர் ஆனந்தம்.


மிக அருமையான படம். குடும்பக்கதை மிகவும் நன்றாக உள்ளது.
அதில் உள்ள மூத்த சகோதரன் தன் சகோதரர்களின் நலனுக்காக மற்றும் குடும்ப நலனுக்காக உழைக்கிறான். அதனால் தாமதமாக திருமணம் செய்து கொள்கிறான். அதனால் அவனுக்கு குழந்தையில்லை(தாமத திருமணத்தால்).

அதில் மூத்த சகோதரனின் பெயர் ராகவா. அவனுக்கு திருமணம் ஆகவில்லையென அவனுடைய தாய் மிகவும் கவலைப்படுகிறாள். நிறைய பிரார்த்தனைகள் செய்கிறார். திருமணம் செய்ய மறுக்கும் மூத்த சகோதரன் சிநேகாவைப் பார்த்ததும் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டு திருமணம் நடக்கிறது.

எனக்கு தெரிந்த குடும்பம் ஒன்று உள்ளது. அதிலும் இதேபோல் நான்கு சகோதரர்கள் இருக்கிறார்கள். மூத்தவனுக்கு திருமணம் ஆகிவிட்டது(தாமதத் திருமணம்தான்).

நல்ல பழக்கங்கள் உள்ளவர்கள் நால்வரும். அந்த நல்ல பழக்கங்களுக்கு காரணம் அவர்களின் பெற்றோரே. பிள்ளைகள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை அப்படியே அன்னையிடம் தந்துவிடுகிறார்கள். மற்ற மூவரும் திருமண வயதை நெருங்குகிறார்கள். ஆனால் அந்த அன்னையும் தந்தையும் பிள்ளைகளின் திருமணத்தைப் பற்றி கவலையேபடுவதில்லை. அவர்களுக்காக எதுவும் சேமிப்பதுமில்லை. தேவையோ இல்லையோ தான் நினைத்த பொருட்களை வாங்கிவிடுவது. ஆடம்பர வாழ்க்கை வாழவேண்டும் என நினைப்பது. எவ்வளவு பணம் வந்தாலும் ஏதாவது செலவு என்றால் தன்னிடம் எதுவுமே இல்லை என்று சொல்வது இது அவரின் வாடிக்கை.

மூத்த சகோதரன் நல்லது சொன்னாலும் அவர்கள் கேட்பதில்லை. நான் உங்களுக்காக எதுவும் சோ்த்துவைக்கவில்லையா என்ன?
அங்கங்கே எவ்வளவு கடன் வைச்சிருக்காங்க என்று பாரு என்கிறார் பதிலுக்கு. கடன் எதுவும் வைப்பதில்லையாம் அது அவர்களுக்கு பெரிய விசயமாம்.

தள்ளிப்போகும் திருமணங்கள் பற்றி ஒரு பதிவு படித்தேன். தள்ளிப்போகும் திருமணங்களுக்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் பெற்றோரின் அக்கறையின்னை மற்றும் சுயநலமும் ஒரு காரணம் என்பது என் கருத்து.

பணத்தின் மீதுள்ள ஆசை எல்லா தீங்கிற்கும் காரணமாகிறது என்று படித்திருக்கிறேன். பணத்தின் மீதுள்ள ஆசை பாசத்தையும் மாற்றிவிடுகிறது. நம் பிள்ளைகளின் வாழ்க்கை வீணாவதற்கு நாமே காரணமாக இருக்கலாமா?. யோசியுங்கள் பெற்றோரே.

பிள்ளைகளும் பெற்றோரையும் கவனிக்கவேண்டும் அதே சமயம் தங்கள் வாழ்க்கைக்காகவும் சிறிது சேமித்து வைத்துக்கொள்வது நல்லது. அதேசமயம் பெற்றோரையும் மறந்துவிடக்கூடாது. அவர்களுக்கும் தேவையான அனைத்தையும் செய்யவேண்டும்.
உழைப்பது ஒருவரென்றால் அதை உழைப்பின் அருமை தெரியாமல் அனுபவிப்பது வேறோருவராக இருந்துவிடக்கூடாது.

முதிர்கன்னிகளைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கும் சமூகம் முதிர்காளைகளைப்பற்றி எப்போது சிந்திக்கப்போகிறது. ஆண் எப்போ கல்யாணம் பண்ணிட்டால் என்ன என்ற சிந்தனை வேறு.
ஆணாகயிருந்தாலும் பெண்ணாகயிருந்தாலும் சரியான வயதில் திருமணம் முடிப்பதே சிறந்தது. தாமதமாய் திருமணம் செய்துகொண்டு அப்புறம் குழந்தையில்லையே என்று வருத்தப்பட்டால் என்ன பயன்.

குழந்தையின்மை சிகிச்சைமையங்கள் தற்காலத்தில் பெருகிவிட்டன. குழந்தையின்மைக்கு பலகாரணம் இருந்தாலும் தாமதத்திருமணங்களும் ஒரு காரணம்.


சிந்தியுங்கள்.

நன்றி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.

No comments: